IST (GMT+5.5)

இந்த வார தியானம்

(Meditation for the Week)

தேவ செய்தி: சகோ.J.இம்மானுவேல் ஜீவகுமார்


பெரியவர்


கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

தேவாலயத்திலும் பெரியவர் இங்கே இருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். (மத்தேயு 12:6)

சீஷர்கள் பயிர் வழியே நடந்து போகையில் பசியாயிருந்ததினால் கதிர்களை கொய்து சாப்பிட்டதை கண்ட பரிசேயர்கள், ஓய்வு நாளில் செய்யக்கூடாததை உம்முடைய சீஷர்கள் செய்கிறார்களே என்று ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடம் குற்றஞ்சாட்டி  சொன்ன போது ஆண்டவர் பதிலளித்த பின் (மத்தேயு 12:3-5) சொன்ன வசனமே மேற்கண்ட வசனம். இதைத்தொடர்ந்து, ஆண்டவர் சொல்லுகிறார்:

பலியையல்ல இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று அறிந்தீர்களானால், குற்றமில்லாதவர்களை நீங்கள் குற்றப்படுத்தமாட்டீர்கள். (மத்தேயு 12:7)

பழைய ஏற்பாட்டின் நியாயப்பிரமாணத்தை அதின் நோக்கமும், உள்ளான அர்த்தமும் அறியாமல், அதின் நோக்கத்தை நிறைவேற்றாமல் அதை வெறும் சரீர முயற்சியாக, சடங்கும் சம்பிரதாயமுமாக கடைபிடித்து வந்த யூதர்களுக்கு, குறிப்பாக பரிசேயர்களுக்கு ஆண்டவர் சொன்ன பதிலே மேற்சொன்ன வசனம்.

தேவன் மெய்யாக மனுஷரோடே பூமியிலே வாசம்பண்ணுவாரோ? இதோ, வானங்களும், வானாதி வானங்களும் உம்மைக் கொள்ளாதே; நான் கட்டின இந்த ஆலயம் எம்மாத்திரம்? (2 நாளாகமம் 6:18)

கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: வானம் எனக்குச் சிங்காசனம், பூமி எனக்குப் பாதபடி; நீங்கள் எனக்குக் கட்டும் ஆலயம் எப்படிப்பட்டது? நான் தங்கியிருக்கும் ஸ்தலம் எப்படிப்பட்டது? (ஏசாயா 66:1)

இந்த சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் தாமே, கிறிஸ்து இயேசுவாக, மனுஷ குமாரானாக தங்கள் நடுவில் உலாவுகிறதை அறிய முடியாத இருதயத்தோடு, காண முடியாத கண்களோடு வாழ்ந்த மக்களைப் போல இப்போது நாமும் இருந்தால் நாம் சற்றே நிதானித்து சத்தியத்தை அறிந்து கொள்வோம். ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நம் சொந்த இரட்சகாராக, தெய்வமாக ஏற்றுக் கொள்வோம். காரணம், உண்மையின் உச்சமாகிய, சத்தியமாகிய ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நாம் ஏற்றுக்கொள்ளாமல் நிராகரித்தால், ஆவிக்குரிய வாழ்வில் என்றும் விலகாத ஆவிக்குரிய குருட்டுத்தன்மை நம்மை ஆட்கொண்டு விடும் (Rejecting the truth, that is rejecting Jesus Christ will  lead to and will result in Spiritual Blindness).

வானாதி வானங்களும் கொள்ளாத ஆண்டவர் இயேசு கிறிஸ்து, நம்மை தம் பிள்ளைகளாக்கி நம் இருதயத்தையே ஆலயமாக்கி நமக்குள் வாழ்வதைத்தான் விரும்புகிறார். நமக்குள் இருந்து நம்மை நேசித்து, அதே தம் அன்பை நம் மூலமாக இந்த உலகத்திற்கு வெளிப்படுத்தி தம் அன்பை இந்த உலக மக்கள் எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதையே விரும்புகிறார்.

...நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி, அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள் என்று, தேவன் சொன்னபடி, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே. (2 கொரிந்தியர் 6:16)

இப்படி நாம் அவருக்கு ஆலயமானால், நாம் தேவனாகிய கர்த்தரை நிச்சயமாக கீழ்க்கண்ட வேத வசனத்தின் படி உள்ளத்தின் ஆழத்திலிருந்து துதிப்போம்.

ஆகையால் தேவனாகிய கர்த்தரே, நீர் பெரியவர் என்று விளங்குகிறது; நாங்கள் எங்கள் காதுகளாலே கேட்ட சகல காரியங்களின்படியும், தேவரீருக்கு நிகரானவர் இல்லை; உம்மைத்தவிர வேறே தேவனும் இல்லை. (2 சாமுவேல் 7:22)

மட்டுமல்ல, மிக அருகிலிருக்கிற ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் அவரோடு எடுத்துக்கொள்ளப்பட்டு என்றென்றும் அவரோடு ஆளும்படியாக, நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் இருக்கிற பிசாசையும், இந்த உலகத்தையும் ஜெயித்ததைப் (யோவான் 16:33) போலவே நாமும்  இந்த உலகத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்கு விரோதமான எல்லாவற்றையும்,இந்த உலகத்தையும்   ஜெயித்தவர்களாக இருப்போம். ஏனெனில்

பிள்ளைகளே, நீங்கள் தேவனால் உண்டாயிருந்து, அவர்களை ஜெயித்தீர்கள்; ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் (இயேசு கிறிஸ்து) பெரியவர். (1 யோவான் 4:4)


நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு,சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். (எபேசியர் 3:20-21)


Print Email