IST (GMT+5.5)

இந்த வார தியானம்

(Meditation for the Week)


தீப ஆவி


கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

நாம் ஆவியினாலே பிழைத்திருந்தால், ஆவிக்கேற்றபடி நடக்கவும் கடவோம். (கலாத்தியர் 5:25)

மேற்கண்ட பரிசுத்த வேத வசனத்தின் படி, நாம் தேவனுடைய ஆவியினாலே பிழைத்திருந்து, அவரால் நடத்தப்படும் போது தான், வேதத்தின் படி நாம் தேவ ஆவிக்கேற்ற படி நடக்கிறவர்களாக இருப்போம். ஆனால், நாம் அப்படி நடக்க முடியாதபடி தடையாய்,

இடையுறாக கீழ்கண்ட வாழ்க்கை முறைகள் இருக்கிறது.

1. மாம்சத்தின்படி - அதாவது உடல், உலக ஆசை இச்சைகளின்படி  நடப்பது
2. ஆத்துமாவின்படி - அதாவது மனதை முக்கியப்படுத்தி, மன விருப்பத்தின்படி நடப்பது

1.மாம்சத்தின்படி (Physical,Sensual,Fleshly life)

முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்கிறவர்களாயிருக்கிறார்கள்; கேட்டவுடனே போய், பிரபஞ்சத்திற்குரிய கவலைகளினாலும் ஐசுவரியத்தினாலும் சிற்றின்பங்களினாலும் நெருக்கப்பட்டு, பலன்கொடாதிருக்கிறார்கள். (லூக்கா 8:14)

மேற்கண்ட வேத வசனம் இதை தெளிவாக விளக்குகிறது. சிற்றின்பங்கள் (Pleaseures of this Life) அதாவது உடல், உலக ஆசை இச்சைகளுக்கு கீழ்படிந்து, அவைகளை நிறைவேற்றி அவைகளையே மையப்படுத்தி வாழுகிற வாழ்க்கை நாம் தேவ ஆவிக்கேற்ற படி வாழ பெரும் தடையாக இருக்கிறது.

2. ஆத்துமாவின்படி (Soul Life)

அதாவது ஆத்துமாவின் ஒரு பகுதியான மனதை மையப்படுத்தி வாழும் வாழ்க்கை. தன் மன விருப்பங்கள், தன் சொந்த கொள்கைகள், நெறிமுறைகள் மற்றும் தன் மன திருப்தி என வாழும் வாழ்க்கை ஆத்தும அல்லது ஆன்மீக வாழ்க்கையாகும்.  ஆண்டவராகிய இயேசுவின் வார்த்தைகளின் படி இதை நாம் கட்டாயம் வெறுத்து வாழ வேண்டியதின் அவசியத்தை நமக்கு தெளிவாக சொல்கிறது. அப்பொழுது தான் நாம் கர்த்தருடைய பிள்ளைகளாய் வாழ முடியும் என்பதற்கு  வழி காட்டி விளக்குகிறது.

பின்பு அவர் எல்லாரையும் நோக்கி: ஒருவன் என் பின்னே வர விரும்பினால் அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை அநுதினமும் எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன். (லூக்கா 9:23)

இதிலே தனைத்தான் என்ற வார்த்தையின்  கிரேக்க மூல மொழி பெயர்ப்பு "ஆத்துமா" என்றே விளக்குகிறது ( The word “himself” is the Greek word "Psuche" - Soul life).

மேற்கண்ட இரண்டு வாழ்க்கை முறைகளும் தவறானதும், வேதத்திற்கு விரோதமானதும் ஆகும். ஆனால் நாம் வாழ வேண்டிய வாழ்க்கை முறையை தான் கீழ்கண்ட வேத வசனம் நமக்கு விளக்குகிறது.

3. ஆவிக்குரிய வாழ்க்கை (Spiritual Life - God's life in our Spirit)

கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் (Spirit of Life) பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே. (ரோமர் 8:2)


திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் (Life) உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன். (யோவான் 10:10)


அவருக்குள் (ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்குள்) ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது. (யோவான் 1:4)

மேற்கண்ட வேத வசனங்களின்படி, தேவனுடைய ஜீவன் நமக்குள் வரும்போது, நம் ஆவியில் அது ஒளியாய் நிரம்பும் போது,

மனுஷனுடைய ஆவி கர்த்தர் தந்த தீபமாயிருக்கிறது; அது உள்ளத்தில் உள்ளவைகளையெல்லாம் ஆராய்ந்துபார்க்கும். (நீதிமொழிகள் 20:27)

அப்பொழுது, அப்போஸ்தலனாகிய பவுல் சொல்வது போல்,

...என் ஆவியோடு நான் சேவிக்கிற தேவன்.... (ரோமர் 1:9)

நாமும் தேவனை ஆவியோடு சேவித்து, தொழுது கொண்டு தேவ ஆவிக்கேற்றபடி நடக்கிறவர்களாயிருப்போம்.


நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு,சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். (எபேசியர் 3:20-21)


Print Email