IST (GMT+5.5)

இந்த வார தியானம்Logo Tamil 253x253

(Meditation for the Week)

தேவ செய்தி: சகோ.J.இம்மானுவேல் ஜீவகுமார்


கிறிஸ்துவின் சிந்தை


கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

...எங்களுக்கோ கிறிஸ்துவின் சிந்தை உண்டாயிருக்கிறது. (1 கொரிந்தியர் 2:16)

பரிசுத்த வேதம், இந்த வசனத்தின் மூலமாக கிறிஸ்துவின் சிந்தை நமக்கு உண்டாயிருக்க முடியும் என்று உறுதியாக சொல்கிறது.

அப்படியானால், நாம் எப்படி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சிந்தையை நம்மில் பெற்றுக் கொள்வது? பரிசுத்த வேதம் அதற்கும் நமக்கு தெளிவான பதிலை அளிக்கிறது.

நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்; அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும், ஆராய்ந்திருக்கிறார். (1 கொரிந்தியர் 2:10)

பரிசுத்த வேதம், மற்றுமொரு வசனத்தில் இப்படியாக கூறுகிறது:

அப்படியே கர்த்தரோடிசைந்திருக்கிறவனும், அவருடனே ஒரே ஆவியாயிருக்கிறான். (1 கொரிந்தியர் 6:17)

அப்படியானால், பரிசுத்த ஆவியானவர் மூலமாக தேவனாகிய கர்த்தர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும் நமக்கு நம்முடைய ஆவியில் தெரிவிக்கிறார். ஆனால், நாம் நம் ஆவியில் அறிவிக்கப்பட்ட தேவ காரியங்களை அறிந்து கொள்ள, புரிந்து செயல்பட நம் ஆவியை, நம் ஆவியில் நடக்கும் காரியங்களை உணரக்கூடியவர்களாக இருக்க வேண்டும். அப்பொழுது தான் கிறிஸ்துவின் சிந்தை அறிந்து, அவருடைய நோக்கங்களை செய்து நிறைவேற்றி நம் ஆண்டவரை மகிழச் செய்ய முடியும். ஒருவேளை இந்த ஆழமான  ஆவிக்குரிய நிலையில் நாம் இல்லாவிட்டால் நம் ஆவியில் தேவன் வெளிப்படுத்தின காரியங்களை அறிந்து, கிறிஸ்துவின் சிந்தை அறிந்து செயல்படுவது எப்படி? (The Mind of Christ is in our Spirit, how do we get it in our mind..that is in our Soul?)

ஒரு முக்கியமான காரியத்தை இங்கே நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். அதாவது இருவர் இசைந்து அல்லது ஒத்துப்போகுதல் (Power of agreement).  

தேவனுடைய ஆவியானவரால் நம் ஆவி (Human spirit)ஆளுகை செய்யப்பட்டு தேவனுக்கு கீழ்படிந்து இருக்கும் போது, நம் ஆவியோடு சேர்ந்து நம் ஆத்துமாவும் (Soul) ஆவியானவருக்கு கீழ்படிந்து நடக்க வேண்டும். அதாவது நம் ஆவியும், ஆத்துமாவும் தேவனுடைய ஆவியானவரால் ஆளுகை செய்யப்பட்டு முழுமையாக ஆவியானவருக்கு கீழ்படிந்து நடக்கும் போது, நம் ஆவியில் அறிவிக்கப்பட்ட தேவ காரியங்களை, கிறிஸ்துவின் சிந்தையை நோக்கங்களை நம் சிந்தையில் (நம் ஆத்துமாவின் ஒரு பகுதியான நம் சிந்தையில், மனதில்)  தெளிவாக நாம் அறிந்து உணர்ந்து புரிந்து கொண்டு அதை செய்து நிறைவேற்ற முடியும். இருவர் ஒருமனப்படுதல் அல்லது ஒத்துப்போகுதல் என்பது இரண்டு தனி நபர்கள் என்று மட்டும் குறிப்பதல்ல, கீழ்காணும் பரிசுத்த வேத வசனம் இன்னும் ஆழமாக இந்த அர்த்தத்தை நமக்கு வெளிப்படுத்துகிறது. இருவர்   - அதாவது, நம் ஆவியும், ஆத்துமாவும் இசைந்து அல்லது ஒத்துப் போகுதல்.

அல்லாமலும், உங்களில் இரண்டு பேர் தாங்கள் வேண்டிக்கொள்ளப்போகிற எந்தக் காரியத்தைக் குறித்தாகிலும் பூமியிலே ஒருமனப்பட்டிருந்தால், பரலோகத்தில் இருக்கிற என் பிதாவினால் அது அவர்களுக்கு உண்டாகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். (மத்தேயு 18:19)


நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு,சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். (எபேசியர் 3:20-21)


Print Email