
இன்றைய பரிசுத்த வேத வசனம்
தேவனுடைய வார்த்தையை பற்றிக்கொண்டு விசுவாசத்தோடு ஜெபித்து கிறிஸ்து இயேசுவுக்குள் ஜெயங்கொள்ளுவோம்:
வசனத்தினாலும் நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக்கடவோம். (1 யோவான் 3:18)You may check
Meditation on the Word of God...Food for your soul: Meditation >> Lets Meditate
வஞ்சகம்
(பரிசுத்த வேத தியானம்)

தேவ செய்தி: சகோ.J.இம்மானுவேல் ஜீவகுமார்
பிப்ரவரி 2026
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,
இரட்சிப்பின் அதிபதி, உலக ரட்சகர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இணையில்லாத திருநாமத்தில் உங்களுக்கு அன்பின் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
(மத்தேயு 24:24) ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்.
(மாற்கு 13:22) ஏனெனில் கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாக அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்.
முன்னதாக "தெரிந்து கொள்ளப்பட்டவர்கள்" என்ற தேவ செய்தியை நீங்கள் படிக்கும்படி உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன். அதன் பிறகு இந்த தேவசெய்தியை நீங்கள் தொடர்ந்து படிக்கும் போது இந்த பரிசுத்த வேத சத்தியத்தை நீங்கள் தெளிவாக அறிந்து கொள்ள அது மிகவும் உதவியாக இருக்கும். நன்றி.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தாமே உரைத்த மேற்கண்ட பரிசுத்த வேத வசனமே இந்த சத்திய தியானத்திற்கு ஆதார வசனம்.
கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் என்கிற வார்த்தைகள் ஒரு மிக முக்கியமான, ஆழமான வேத சத்தியத்தை நமக்கு உணர்த்துகிறது. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தம்முடைய வார்த்தைகளை கைக்கொண்டு, அதாவது பரிசுத்த வேத கற்பனைகளைக் கைக்கொண்டு தம்முடைய வழிகளில் நடக்கிற தம்முடைய பிள்ளைகளாகிய தெரிந்து கொள்ளப்பட்டவர்களுக்கு முன் இருக்கிற ஒரு பேராபத்தை குறித்து நமக்கு எச்சரித்து சொல்லி இருக்கிறார். தேவ பிள்ளைகளாகிய நாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் மேகங்களின் மீது எடுத்துக்கொள்ளப்படுகிற இரகசிய வருகையை, அதைத்தொடர்ந்து அவருடைய இரண்டாம் வருகையை நெருங்கிக்கொண்டிருக்கிறோம், நம்முடைய வாழ்வின் ஒவ்வொரு நாளாக அதற்கு ஆயத்தப்பட்டு கொண்டிருக்கிறோம்.
இந்த சூழ்நிலையில் அழைக்கப்பட்டவர்கள் மட்டுமல்ல, கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் சேர்த்து வஞ்சிக்கிற அற்புத அடையாளங்கள் கள்ளக்கிறிஸ்துக்கள், கள்ளதீர்க்கதரிசிகள், கள்ளப்போதகர்களால் செய்யப்படும்போது நாம் அவைகளை நம்பி, வஞ்சிக்கப்பட்டு போகாதபடிக்கு மிகுந்த ஜாக்கிரதையாய் நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையை அதாவது நம் ஆவி, ஆத்துமா, சரீரத்தையும், பரிசுத்த விசுவாசத்தையும் காத்துக்கொள்ள வேண்டும்.
(1 யோவான் 4:1-3) பிரியமானவர்களே, உலகத்தில் அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள்.
(2 பேதுரு 2:1-3) கள்ளத்தீர்க்கதரிசிகளும் ஜனங்களுக்குள்ளே இருந்தார்கள், அப்படியே உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள்; அவர்கள் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழையப்பண்ணி, தங்களைக் கிரயத்துக்குக்கொண்ட ஆண்டவரை மறுதலித்து, தங்களுக்குத் தீவிரமான அழிவை வருவித்துக்கொள்ளுவார்கள். (2) அவர்களுடைய கெட்ட நடக்கைகளை அநேகர் பின்பற்றுவார்கள்; அவர்கள்நிமித்தம் சத்தியமார்க்கம் தூஷிக்கப்படும். (3) பொருளாசையுடையவர்களாய், தந்திரமான வார்த்தைகளால் உங்களைத் தங்களுக்கு ஆதாயமாக வசப்படுத்திக்கொள்ளுவார்கள்; பூர்வகாலமுதல் அவர்களுக்கு விதிக்கப்பட்ட ஆக்கினை அயர்ந்திராது, அவர்களுடைய அழிவு உறங்காது.
(2 தெசலோனிக்கேயர் 2:9-10) அந்த அக்கிரமக்காரனுடைய (கேட்டின் மகனாகிய பாவ மனுஷன் அந்திக் கிறிஸ்துவினுடைய) வருகை சாத்தானுடைய செயலின்படி சகல வல்லமையோடும் அடையாளங்களோடும் பொய்யான அற்புதங்களோடும், (10) கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே அநீதியினால் உண்டாகும் சகலவித வஞ்சகத்தோடும் இருக்கும். இரட்சிக்கப்படத்தக்கதாய்ச் சத்தியத்தின்மேலுள்ள அன்பை அவர்கள் அங்கிகரியாமற்போனபடியால் அப்படி நடக்கும்.
பரிசுத்த வேதம் முழுவதும் தேவனாகிய கர்த்தருடைய அற்புத அதிசயங்களால் நிறைந்திருக்கும் பொழுது தேவனுடைய பிள்ளைகளாகிய தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் அதிசயங்கள் மற்றும் அடையாளங்களினால் எப்படி வஞ்சிக்கப்பட முடியும் என்று கேள்வி நமக்குள்ளே எழும்.
தேவனாகிய கர்த்தரால், அவருடைய பரிசுத்த ஆவியானவரால் செய்யப்படும் அற்புத அதிசயங்கள், அடையாளங்கள் பரிசுத்த வேத வசனத்துக்கு சாட்சியாக இருக்கும். அவருடைய பிள்ளைகளாகிய நம்மை விசுவாசத்தில் பலப்படுத்தும். கர்த்தருடைய சாட்சிகளாய் நம்மை அவருக்குள் நிலைநிறுத்தும். ஆவி, ஆத்தும, சரீர இரட்சிப்பை நமக்கு அருளிச் செய்யும். தேவ சித்தத்தை, நோக்கத்தை நம் வாழ்விலும் இந்த உலகத்திலும் நிறைவேற்றும். தேவ நாமம் மகிமைப்படும். தேவ ராஜ்யமே கட்டி எழுப்பப்படும்.
பரிசுத்த வேத வசனங்களை படிக்க:
(அப்போஸ்தலர் 14:3) அவர்கள் அங்கே அநேகநாள் சஞ்சரித்துக் கர்த்தரை முன்னிட்டுத் தைரியமுள்ளவர்களாய்ப் போதகம்பண்ணினார்கள்; அவர் தமது கிருபையுள்ள வசனத்திற்குச் சாட்சியாக அடையாளங்களும் அற்புதங்களும் அவர்கள் கைகளால் செய்யப்படும்படி அநுக்கிரகம்பண்ணினார்.
(மாற்கு 16:20) அவர்கள் புறப்பட்டுப்போய், எங்கும் பிரசங்கம்பண்ணினார்கள். கர்த்தர் அவர்களுடனேகூடக் கிரியையை நடப்பித்து, அவர்களால் நடந்த அடையாளங்களினாலே வசனத்தை உறுதிப்படுத்தினார். ஆமென்.
(அப்போஸ்தலர் 3:11) குணமாக்கப்பட்ட சப்பாணி பேதுருவையும் யோவானையும் பற்றிக்கொண்டிருக்கையில், ஜனங்களெல்லாரும் பிரமித்து, சாலொமோன் மண்டபம் என்னப்பட்ட மண்டபத்திலே அவர்களிடத்திற்கு ஓடிவந்தார்கள்.
(அப்போஸ்தலர் 5:12) அப்போஸ்தலருடைய கைகளினாலே அநேக அடையாளங்களும் அற்புதங்களும் ஜனங்களுக்குள்ளே செய்யப்பட்டது. எல்லாரும் ஒருமனப்பட்டுச் சாலொமோனுடைய மண்டபத்தில் இருந்தார்கள்.
(எபிரெயர் 2:4) அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் பலவிதமான பலத்த செய்கைகளினாலும், தம்முடைய சித்தத்தின்படி பகிர்ந்துகொடுத்த பரிசுத்த ஆவியின் வரங்களினாலும், தேவன் தாமே சாட்சிகொடுத்ததுமாயிருக்கிற இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக்குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம்.
(லூக்கா 10:19) இதோ, சர்ப்பங்களையும் தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகல வல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரங்கொடுக்கிறேன்; ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தமாட்டாது.
(மாற்கு 16:17) விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்; நவமான பாஷைகளைப் பேசுவார்கள்; (18) சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதியஸ்தர்மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார்.
ஆனால் பிசாசினால், பிசாசின் ஆவிகளால் மிகக்குறிப்பாக அந்திக் கிறிஸ்துவின் ஆவி, அந்திக் கிறிஸ்துவை உயர்த்திப்பிடிக்கும் அவனுடைய கள்ளத் தீர்க்கதரிசி என சாத்தானால் செய்யப்படும் அடையாளங்கள், அதிசயங்கள் ஆகியவை தேவனுடைய பிள்ளைகளை, கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் ஏமாற்றும், வஞ்சிக்கும். தேவனுக்கேற்ற பரிசுத்தமும், நீதியும் நிறைந்த வாழ்க்கையை விட்டு வழி விலகச் செய்யும். தேவனாகிய கர்த்தர் மீது நமக்கு இருக்கிற, தேவன் தம் பரிசுத்த வசனத்தினாலே, பரிசுத்த ஆவியானவராலே நமக்கு அருளியிருக்கிற பரிசுத்த விசுவாசத்தை குலைத்து போடும். அதினிமித்தம் தேவனை விட்டு விலகுவதற்கு ஏதுவான அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயமாக நம்முடைய இருதயம் மாறிப் போகும். இறுதியாக, தேவனோடு என்றென்றும் வாழ்கிற ஈடு இணையில்லாத நித்திய ஜீவனை இழந்து போகச்செய்யும். வெள்ளை சிங்காசன நியாத்தீர்ப்பின் நாளிலே ஆத்துமாவும், சரீரமும் தண்டனை தீர்ப்புக்கு ஆளாகி என்றென்றைக்குமாக நரகத்தைச் சென்றடையும்.
எனவே தான், எல்லாவற்றையும் சோதித்து பார்த்து பரிசுத்த வேத வசனத்தின்படி நலமானதை மட்டுமே பற்றிக்கொள்வோம். சாத்தானின் தந்திரங்களையும், வஞ்சகங்களையும், பிசாசின் மக்களுடைய கடைசி கால வேத புரட்டான கலப்பட போதனைகளையும், தேவனுடைய ஆவியானவரால் அருளப்படாத வெறும் மனுஷ உபதேச வார்த்தைகளையும், போலிகளையும் நாம் அடையாளம் கண்டுகொள்ள உண்மை நமக்கு தெரிந்து இருக்க வேண்டும். பரிசுத்த வேத சத்தியம் நமக்குள் நிறைந்து இருக்க வேண்டும். பரிசுத்த வேத சத்திய வழியிலே ஒவ்வொரு நாளும் நடந்து பழகியிருக்க வேண்டும்.
பரிசுத்த வேத வசனங்களை படிக்க:
(யோவான் 8:44) .. அவன் (பிசாசு) ஆதிமுதற்கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்.
(எரேமியா 23:26) ... பொய்த்தீர்க்கதரிசனம் சொல்லுகிற தீர்க்கதரிசிகளின் இருதயத்தில் ஏதாகிலுமுண்டோ? இவர்கள் தங்கள் இருதயத்தின் வஞ்சகத்தையே தீர்க்கதரிசனமாகச் சொல்லுகிறவர்கள்.
(செப்பனியா 3:4) அதின் தீர்க்கதரிசிகள் வீண்பெருமையும் வஞ்சகமுமுள்ளவர்கள்; அதின் ஆசாரியர்கள் பரிசுத்த ஸ்தலத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்கி, வேதத்துக்கு அநியாயஞ்செய்தார்கள்.
(2 யோவான் 1:7) மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத அநேக வஞ்சகர் உலகத்திலே தோன்றியிருக்கிறார்கள்; இப்படிப்பட்டவனே வஞ்சகனும் அந்திக்கிறிஸ்துவுமாயிருக்கிறான்.
ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே நமக்கு வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறார். அவருடையே வார்த்தையே முற்றிலும் உண்மை, என்றும் மாறாத சத்தியம்.
பரிசுத்த வேத வசனங்களை படிக்க:
(சங்கீதம் 119:160) உம்முடைய வசனம் சமூலமும் சத்தியம், உம்முடைய நீதி நியாயமெல்லாம் நித்தியம்.
(யோவான் 17:17) உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம்.
(சங்கீதம் 119:29) பொய்வழியை என்னைவிட்டு விலக்கி, உம்முடைய வேதத்தை எனக்கு அருள்செய்யும்.
(சங்கீதம் 119:104) உமது கட்டளைகளால் உணர்வடைந்தேன், ஆதலால் எல்லாப் பொய்வழிகளையும் வெறுக்கிறேன்.
(சங்கீதம் 119:128) எல்லாவற்றைப்பற்றியும் நீர் அருளின எல்லாக் கட்டளைகளும் செம்மையென்று எண்ணி, சகல பொய்வழிகளையும் வெறுக்கிறேன்.
(1 தெசலோனிக்கேயர் 5:21) எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்.
(1 யோவான் 4:1-3) பிரியமானவர்களே, உலகத்தில் அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள். (2) தேவஆவியை நீங்கள் எதினாலே அறியலாமென்றால்: மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணுகிற எந்த ஆவியும் தேவனால் உண்டாயிருக்கிறது. (3) மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல; வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திக்கிறிஸ்துவினுடைய ஆவி அதுவே, அது இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது.
(1 தெசலோனிக்கேயர் 2:3) எங்கள் போதகம் வஞ்சகத்தினாலும் துராசையினாலும் உண்டாகவில்லை, அது கபடமுள்ளதாயுமிருக்கவில்லை.
உண்மையும் பொய்யும் கலந்தது வஞ்சகம்:
இதற்கு மிகச் சிறந்த உதாரணம் - தேவன் படைத்த முதல் மனிதனை,மனுஷியை சர்ப்பம் என்று அழைக்கப்பட்ட சாத்தான் எப்படி வஞ்சித்தான் என்பதை ஆதியாகமம் 2 & 3 ஆம் அதிகாரங்களில் நாம் அறிந்து கொள்ளலாம்.
தேவனாகிய கர்த்தருடைய வார்த்தையாகிய கட்டளை:
(ஆதியாகமம் 2:16-17) தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி: நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம். (17) ஆனாலும் நன்மைதீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்.
தேவ கட்டளையை மீறி பாவம் செய்யும்படி தந்திரமாய், வஞ்சகமாய், சாத்தான் சொன்னது :
(ஆதியாகமம் 3:1-6) தேவனாகிய கர்த்தர் உண்டாக்கின சகல காட்டு ஜீவன்களைப்பார்க்கிலும் சர்ப்பமானது தந்திரமுள்ளதாயிருந்தது. அது ஸ்திரீயை நோக்கி: நீங்கள் தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்கவேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ என்றது. (2) ஸ்திரீ சர்ப்பத்தைப் பார்த்து: நாங்கள் தோட்டத்திலுள்ள விருட்சங்களின் கனிகளைப் புசிக்கலாம்; (3) ஆனாலும், தோட்டத்தின் நடுவில் இருக்கிற விருட்சத்தின் கனியைக் குறித்து, தேவன்: நீங்கள் சாகாதபடிக்கு அதைப் புசிக்கவும் அதைத் தொடவும் வேண்டாம் என்று சொன்னார் என்றாள். (4) அப்பொழுது சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி: நீங்கள் சாகவே சாவதில்லை; (5) நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது. (6) அப்பொழுது ஸ்திரீயானவள், அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள்; அவனும் புசித்தான்.
பலநேரங்களில் கள்ள ஊழியர்களின் வஞ்சக உபதேசங்களினால் மட்டுமல்ல, நம்மை நாமே வஞ்சித்துக் கொள்ள முடியும் என்று பரிசுத்த வேதம் எச்சரிக்கிறது. தொடர்ந்து பாவம் செய்து கொண்டே இருந்து இதெல்லாம் பாவம் இல்லை, இது எனக்கு பாவம் இல்லை என்று மனதில் நினைக்கும் பொழுது நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாய் இருக்கிறோம் இன்று வேதம் எச்சரிக்கிறது . அதன் விளைவு பரிசுத்த வேத சத்தியத்தினால் நாம் நிறைந்து இருக்க முடியாது. சத்தியத்திலே நிலைத்து நிற்க முடியாது. சத்தியத்திலே வளர முடியாது. அதன் விளைவு பேராபத்து - கர்த்தரை விட்டு நிரந்தரமாய் வழி விலகிப் போய்விடும் பேராபத்து.
(1 யோவான் 1:8) நமக்குப் பாவமில்லையென்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது.
(1 யோவான் 1:10) நாம் பாவஞ்செய்யவில்லையென்போமானால், நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாயிருப்போம், அவருடைய வார்த்தை நமக்குள் இராது.
வஞ்சகத்தினால் கர்த்தரை விட்டு, அவருடைய வழிகளை விட்டு விழுந்து போவது என்பது உடனடியாக, ஒரே நாளில் நடப்பது இல்லை. நாமே அறியாமல், மெல்ல மெல்ல உணர்வற்றவர்களாகி, கர்த்தரை பற்றியிருக்கும் உறுதியிலிருந்து விலகி, தேவனுடைய வழிகளை விட்டு இழுப்புண்டு விழுந்து போகிறதே நடக்கும் என பரிசுத்த வேதம் நம்மை எச்சரிக்கிறது. ஜாக்கிரதையாய் இருப்போம்.
பரிசுத்த வேத வசனங்களை படிக்க:
(2 பேதுரு 3:17-18) ஆதலால் பிரியமானவர்களே, இவைகளை முன்னமே நீங்கள் அறிந்திருக்கிறபடியால், அக்கிரமக்காரருடைய வஞ்சகத்திலே நீங்கள் இழுப்புண்டு உங்கள் உறுதியிலிருந்து விலகி விழுந்துபோகாதபடிக்கு எச்சரிக்கையாயிருந்து, (18) நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையிலும் அவரை அறிகிற அறிவிலும் வளருங்கள். அவருக்கு இப்பொழுதும் என்றென்றைக்கும் மகிமையுண்டாவதாக. ஆமென்.
(சங்கீதம் 139:24) வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும்.
(சங்கீதம் 119:27) உமது கட்டளைகளின் வழியை எனக்கு உணர்த்தியருளும்; ..
(சங்கீதம் 119:34) எனக்கு உணர்வைத் தாரும்; அப்பொழுது நான் உமது வேதத்தைப் பற்றிக்கொண்டு, என் முழு இருதயத்தோடும் அதைக் கைக்கொள்ளுவேன்.
(1 யோவான் 2:28) அவர் வெளிப்படும்போது நாம் அவர் வருகையில் அவருக்கு முன்பாக வெட்கப்பட்டுப்போகாமல் தைரியமுள்ளவர்களாயிருக்கும்படிக்கு அவரில் நிலைத்திருங்கள்.
ஒருவேளை அசதியாய் இருந்து கர்த்தருடைய வழிகளை விட்டு விலகி, பரிசுத்த வேத சத்தியத்தை மீறி துணிகரமாய் நடந்து , சாத்தானின் வஞ்சகத்துக்கு தன்னை ஒப்பபுக் கொடுத்து , பாவ இன்பங்களில் உழன்று மகிழ்ந்தால் என்ன நடக்கும்?
(எபிரெயர் 6:4-6) ஏனெனில், ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரமஈவை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும், (5) தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும், (6) மறுதலித்துப்போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்புதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாதகாரியம்.
தெரிந்து கொள்ளப்பட்டவர்களும் வஞ்சிக்கப்பட்டு போகும் கொடிய காலங்களுக்குள் வந்துவிட்டோம். அந்தி கிறிஸ்துவின் வருகையை எதிர்நோக்கி இருக்கிற நமக்கு, அந்த நாள் நெருங்க நெருங்க இந்த வஞ்சகத்தின் தீவிரம் இன்னும் அதிகரிக்கும். பரிசுத்த வேதத்தில் தேவனாகிய கர்த்தர் போதித்திருக்கிற அவருடைய சத்தியத்தினாலே நம்மை நிரப்புவோம். அவருடைய வழியிலே நடந்து நம்மை காத்து கொள்வோம். முடிவு பரியந்தம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் நிலைத்திருந்தால் மட்டுமே இரட்சிக்கப்படுவோம். பரலோக ராஜ்யம் சென்று சேர்வோம். நித்திய ஜீவனை பெற்றுக் கொள்வோம். ஒவ்வொரு நாளும் கர்த்தருக்கு நம்மை ஒப்புக்கொடுத்து அதிக விழிப்போடும் ஜாக்கிரதையுடனும் இருப்போம். பரிசுத்த ஆவியானவர் தாமே பரிசுத்த வேத சத்தியத்திலே நம்மை முடிவு பரியந்தம் காத்து நடத்துவாராக. ஆமென்.
சமாதானத்தின் தேவன் தாமே உங்களை
(1 தெசலோனிக்கேயர் 5:23) ... முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக. உங்கள் ஆவி ஆத்துமா சரீரம் முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக.
கிறிஸ்து இயேசுவின் நாமத்தினாலே, தேவனாகிய கர்த்தர் ஒருவருக்கே நேற்றும் இன்றும் என்றுமான சதா காலங்களிலும் மகிமை உண்டாவதாக. சத்திய ஆவியாகிய தேற்றரவாளனுக்கு நன்றி செலுத்தி ஸ்தோத்திரிக்கிறேன். ஆமென்.
மாரநாதா, கர்த்தர் வருகிறார்!
Thou art my King, O God. (Ps 44:4)
Pray

இஸ்ரவேலின் சமாதானத்துக்காக, பாதுகாப்பிற்காக தேவனிடத்தில் வேண்டிக்கொள்வோம்...
எருசலேமின் சமாதானத்துக்காக வேண்டிக்கொள்ளுங்கள்;உன்னை நேசிக்கிறவர்கள் சுகித்திருப்பார்களாக. உன் அலங்கத்திற்குள்ளே சமாதானமும், உன் அரமனைகளுக்குள்ளே சுகமும் இருப்பதாக. (சங்கீதம் 122:6-7)
வடதிசையிலுள்ள சீயோன் பர்வதம் வடிப்பமான ஸ்தானமும் சர்வபூமியின் மகிழ்ச்சியுமாயிருக்கிறது, அதுவே மகாராஜாவின் நகரம். (சங்கீதம் 48:2)
...எருசலேமின்பேரிலும் சத்தியம்பண்ணவேண்டாம், அது மகாராஜாவினுடைய நகரம். (மத்தேயு 5:35)
