பக்தியற்றவர்கள்

 தேவ செய்தி - நவம்பர் 2021 ( God's Message - Nov 2021)

தேவ செய்தி: சகோ.J.இம்மானுவேல் ஜீவகுமார்


கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

(யூதா 1:4) ஏனெனில் நமது தேவனுடைய கிருபையைக் காமவிகாரத்துக்கேதுவாகப் புரட்டி, ஒன்றான ஆண்டவராகிய தேவனையும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவையும் மறுதலிக்கிற பக்தியற்றவர்களாகிய சிலர் பக்கவழியாய் நுழைந்திருக்கிறார்கள்; அவர்கள் இந்த ஆக்கினைக்குள்ளாவார்களென்று பூர்வத்திலே எழுதியிருக்கிறது.

பக்தியற்றவர்கள் யார்? (Who is ungodly?)

1) நமது தேவனுடைய கிருபையைக் காமவிகாரத்துக்கேதுவாகப் புரட்டி,
2) ஒன்றான ஆண்டவராகிய தேவனையும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவையும் மறுதலிக்கிறவர்கள்

ஈடு இணையில்லாத தேவ கிருபையின் நோக்கம் பரிசுத்த தெய்வமாகிய சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தருக்கு முன்பதாக, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு முன்பதாக - அவருடைய வழியில் நாம் நடக்கும் போது நமக்கு உண்டாகும் குறைவுகள், பெலவீனங்கள், பாடுகள், சோதனைகள் ஆகியவற்றினால் நாம் கர்த்தருடைய வழிகளை விட்டு இடறி விழுந்து, நித்திய ஜீவனை பெற்றுக்கொள்ள முடியாமல் நரகத்திற்கு நம் ஆத்துமா சென்றுவிடாமல் - இவற்றின் நடுவே கர்த்தருக்கு பிரியமாக அவருடைய வழிகளிலேயே தொடர்ந்து நாம் நடக்க நம்மை தூக்கி சுமந்து, கர்த்தருக்குள் நிலைநிறுத்தி, பாதுகாத்து, பராமரித்து முடிவிலே தேவனுடைய ராஜ்யத்திற்கு நாம் சென்று சேர நமக்கு கொடுக்கப்பட்டது தான் தேவ கிருபை - அதாவது தகுதியில்லை என்றாலும் நமக்கு தேவன் காண்பிக்கும் இரக்கம்.

இப்படிப்பட்ட உன்னதமான தேவன் அருளும் கிருபையை - காமவிகார, இச்சை பாவ இன்பங்களுக்காக பரிசுத்த வேதத்திற்கு விரோதமாக புரட்டி, இந்த தேவ கிருபையை ஒரு கேடகம் போல வைத்துக் கொண்டு தொடர்ந்து மகா பாவ வாழ்க்கை வாழ்பவர்களும் இன்னமும் மகா கேடும், அழிவும் தங்களுக்கு வரத்தக்கதாக ஒன்றான ஆண்டவராகிய தேவனையும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவையும் மறுதலிக்கிறவர்களுமே பக்தியில்லாதவர்கள் என்று தேவனாகிய கர்த்தர் மேற்கண்ட பரிசுத்த வேத வசனத்தின் மூலமாக நமக்கு திட்டமும், தெளிவுமாக எச்சரித்து சொல்கிறார். மிகுந்த கவனத்துடனும், பயபக்தியோடும் இதை உணர்ந்து கொள்வோம். இருதயத்திலே எழுதிக் கொள்வோம்.

(யூதா 1:7) அப்படியே சோதோம் கொமோரா பட்டணத்தார்களும், அவைகளைச் சூழ்ந்த பட்டணத்தார்களும், அவர்களைப்போல் விபசாரம்பண்ணி, அந்நிய மாம்சத்தைத் தொடர்ந்து, நித்திய அக்கினியின் ஆக்கினையை அடைந்து, திருஷ்டாந்தமாக வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

(யூதா 1:10) இவர்கள் தங்களுக்குத் தெரியாதவைகளைத் தூஷிக்கிறார்கள்; புத்தியில்லாத மிருகங்களைப்போலச் சுபாவப்படி தங்களுக்குத் தெரிந்திருக்கிறவைகளாலே தங்களைக் கெடுத்துக்கொள்ளுகிறார்கள்.

(யூதா 1:18-19) கடைசிக்காலத்திலே தங்கள் துன்மார்க்கமான இச்சைகளின்படி நடக்கிற பரியாசக்காரர் தோன்றுவார்கள் என்று உங்களுக்குச் சொன்னார்களே. இவர்கள் பிரிந்துபோகிறவர்களும், ஜென்மசுபாவத்தாரும், ஆவியில்லாதவர்களுமாமே.

(2 பேதுரு 2:6-10) சோதோம் கொமோரா என்னும் பட்டணங்களையும் சாம்பலாக்கிக் கவிழ்த்துப்போட்டு, ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்து, பிற்காலத்திலே அவபக்தியாய் நடப்பவர்களுக்கு அவைகளைத் திருஷ்டாந்தமாக வைத்து; (7) அக்கிரமக்காரருக்குள் வாசமாயிருக்கையில் அவர்களுடைய காமவிகார நடக்கையால் வருத்தப்பட்டு; (8) நாள்தோறும் அவர்களுடைய அக்கிரமக்கிரியைகளைக் கண்டு கேட்டு நீதியுள்ள தன்னுடைய இருதயத்தில் வாதிக்கப்பட்ட நீதிமானாகிய லோத்தை அவர் இரட்சித்திருக்க; (9) கர்த்தர் தேவபக்தியுள்ளவர்களைச் சோதனையினின்று இரட்சிக்கவும், அக்கிரமக்காரரை ஆக்கினைக்குள்ளானவர்களாக நியாயத்தீர்ப்பு நாளுக்கு வைக்கவும் அறிந்திருக்கிறார். (10) விசேஷமாக அசுத்த இச்சையோடே மாம்சத்திற்கேற்றபடி நடந்து, கர்த்தத்துவத்தை அசட்டைபண்ணுகிறவர்களை அப்படிச் செய்வார். இவர்கள் துணிகரக்காரர், அகங்காரிகள், மகத்துவங்களைத் தூஷிக்க அஞ்சாதவர்கள்.

(2 பேதுரு 3:3-4) முதலாவது நீங்கள் அறியவேண்டியது என்னவெனில்: கடைசிநாட்களில் பரியாசக்காரர் வந்து, தங்கள் சுய இச்சைகளின்படியே நடந்து, அவர் வருவார் என்று சொல்லுகிற வாக்குத்தத்தம் எங்கே? பிதாக்கள் நித்திரையடைந்தபின்பு சகலமும் சிருஷ்டிப்பின்தோற்றமுதல் இருந்தவிதமாயிருக்கிறதே என்று சொல்லுவார்கள்.

சுத்தமான பக்தி:

(யாக்கோபு 1:27) திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதும், உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளுகிறதுமே பிதாவாகிய தேவனுக்குமுன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது.

தேவனுக்கேற்ற பக்தியில் நிறைந்திருப்பதெல்லாம் தேவ நீதியும், தேவனுக்கேற்ற பரிசுத்தமுமே. இவை இரண்டும் இல்லாமல் நான் பக்திமான் என்று சொல்வது முழுக்க முழுக்க பொய்யும், தன்னைத் தானே ஏமாற்றிக்கொள்வதும், பரிசுத்த வேதத்திற்கு விரோதமானதுமாகும். மேற்கண்ட பரிசுத்த வேத வசனம் இதையே நமக்கு விளக்கி சொல்கிறது. அதாவது, ஒருபுறம் இந்த உலகத்தின் ஆசைகள், இரத்தமும் சதையுமான இந்த உடலின் இச்சைகள், கிரியைகள் மற்றும் இவ்வுலக வாழ்வின் பெருமை ( 1 யோவான் 2:16) போன்றவைகளின் கறை -  அதாவது பாவக்கறை நம்மீது படாமல் நம்மை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வழியில் காத்துகொள்வதும், மற்றொருபுறம் எளியவர்களுக்கும், இல்லாதவர்களுக்கும், சிறுமைபட்டு உதவியற்று நிற்கிறவர்களுக்கும், கைவிடப்பட்டவர்களுக்கும் நம்மாலான உதவிகளை நம் முடிவு வரை செய்து கொண்டு இருப்பதுமே ஆகும்.

தேவனுக்கேற்ற பக்தியில், பரிசுத்தம் என்பதை நாம் எளிதாக புரிந்து கொள்ளவும், ஏற்றுக் கொள்ளவும் முடிகிறது. ஏனெனில், இது தேவனால் நமக்கு உண்டான கட்டளை. பரிசுத்த வேதத்திலே தேவனாகிய கர்த்தர் தாமே உரைத்திருக்கிறார்:

(லேவியராகமம் 11:45) நான் உங்கள் தேவனாயிருக்கும்படி உங்களை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணின கர்த்தர், நான் பரிசுத்தர்; ஆகையால், நீங்களும் பரிசுத்தராயிருப்பீர்களாக.

(லேவியராகமம் 19:2) ...உங்கள் தேவனும் கர்த்தருமாகிய நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள்.

(1 பேதுரு 1:16) நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று எழுதியிருக்கிறதே.

ஆனால் எளியவர்களுக்கும், இல்லாதவர்களுக்கும், சிறுமைபட்டு உதவியற்று நிற்கிறவர்களுக்கும்,கைவிடப்பட்டவர்களுக்கும் நம்மாலான உதவிகளை செய்வது என்பது தேவனுக்கேற்ற பக்தியாகுமா என ஒருவேளை நாம் எண்ணினால், நம் தேவனாகிய கர்த்தர், நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து எப்படிப்பட்டவர் என்பதை நாம் அறிந்து கொள்ளும்போது, நாமும் அவ்வாறு செய்வதையே தேவன் எதிர்பார்க்கிறார் என்பதும், தேவனுக்கேற்ற பக்தியில் இது அடங்கியிருக்கிறது என்பதும் நமக்கு விளங்கும். பரிசுத்த வேதம் நமக்கு இவற்றை தெளிவாக விளக்கி போதிக்கிறது:

(உபாகமம் 10:18) அவர் திக்கற்ற பிள்ளைக்கும் விதவைக்கும் நியாயஞ்செய்கிறவரும், அந்நியன்மேல் அன்புவைத்து அவனுக்கு அன்னவஸ்திரம் கொடுக்கிறவருமாய் இருக்கிறார்.

(சங்கீதம் 68:5) தம்முடைய பரிசுத்த வாசஸ்தலத்திலிருக்கிற தேவன், திக்கற்ற பிள்ளைகளுக்குத் தகப்பனும், விதவைகளுக்கு நியாயம் விசாரிக்கிறவருமாயிருக்கிறார்.

(சங்கீதம் 103:6) ஒடுக்கப்படுகிற யாவருக்கும், கர்த்தர் நீதியையும் நியாயத்தையும் செய்கிறார்.

நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை குறித்து அவர் என்ன செய்யப்போகிறார் என்றும் முன்னமே தீர்க்கதரிசனமாக முன்னுரைக்கப்பட்டிருக்கிறது.

(ஏசாயா 61:1-3) கர்த்தராகிய தேவனுடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார்; சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கக் கர்த்தர் என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங்கட்டுதலையும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், கட்டுண்டவர்களுக்குக் கட்டவிழ்த்தலையும் கூறவும், கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தையும், நம்முடைய தேவன் நீதியைச்சரிக்கட்டும் நாளையும் கூறவும், துயரப்பட்ட அனைவருக்கும் ஆறுதல் செய்யவும், சீயோனிலே துயரப்பட்டவர்களைச் சீர்ப்படுத்தவும், அவர்களுக்குச் சாம்பலுக்குப் பதிலாகச் சிங்காரத்தையும், துயரத்துக்குப் பதிலாக ஆனந்த தைலத்தையும், ஒடுங்கின ஆவிக்குப் பதிலாகத் துதியின் உடையையும் கொடுக்கவும், அவர் என்னை அனுப்பினார்; ...

(லூக்கா 4:18-19) கர்த்தருடைய ஆவியானவர் என்மேலிருக்கிறார்; தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நருங்குண்டவர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், குருடருக்குப் பார்வையையும் பிரசித்தப்படுத்தவும், நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும், கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தைப் பிரசித்தப்படுத்தவும், என்னை அனுப்பினார், என்று எழுதியிருக்கிற இடத்தை அவர் கண்டு...

(சங்கீதம் 146:7-9) அவர் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நியாயஞ்செய்கிறார்; பசியாயிருக்கிறவர்களுக்கு ஆகாரங் கொடுக்கிறார்; கட்டுண்டவர்களைக் கர்த்தர் விடுதலையாக்குகிறார். குருடரின் கண்களைக் கர்த்தர் திறக்கிறார்; மடங்கடிக்கப்பட்டவர்களைக் கர்த்தர் தூக்கிவிடுகிறார்; நீதிமான்களைக் கர்த்தர் சிநேகிக்கிறார். பரதேசிகளைக் கர்த்தர் காப்பாற்றுகிறார்; அவர் திக்கற்ற பிள்ளையையும் விதவையையும் ஆதரிக்கிறார்; துன்மார்க்கரின் வழியையோ கவிழ்த்துப்போடுகிறார்.

(மத்தேயு 15:32) பின்பு, இயேசு தம்முடைய சீஷர்களை அழைத்து: ஜனங்களுக்காகப் பரிதபிக்கிறேன், இவர்கள் என்னிடத்தில் மூன்றுநாள் தங்கியிருந்து சாப்பிட ஒன்றுமில்லாதிருக்கிறார்கள்; இவர்களைப் பட்டினியாய் அனுப்பிவிட எனக்கு மனதில்லை, வழியில் சோர்ந்துபோவார்களே என்றார்.

(மாற்கு 8:3) இவர்களில் சிலர் தூரத்திலிருந்து வந்தவர்களாகையால், நான் இவர்களைப் பட்டினியாய் வீட்டிற்கு அனுப்பிவிட்டால் வழியில் சோர்ந்துபோவார்களே என்றார்.

(மத்தேயு 15:35-38) அப்பொழுது அவர் ஜனங்களைத் தரையில் பந்தியிருக்கக் கட்டளையிட்டு, அந்த ஏழு அப்பங்களையும் அந்த மீன்களையும் எடுத்து, ஸ்தோத்திரம் பண்ணி, பிட்டுத் தம்முடைய சீஷர்களிடத்தில் கொடுத்தார்; சீஷர்கள் ஜனங்களுக்குப் பரிமாறினார்கள். எல்லாரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள்; மீதியான துணிக்கைகளை ஏழு கூடைநிறைய எடுத்தார்கள். ஸ்திரீகளும் பிள்ளைகளும் தவிர, சாப்பிட்ட புருஷர் நாலாயிரம்பேராயிருந்தார்கள்.

(யாக்கோபு 2:15-16) ஒரு சகோதரனாவது சகோதரியாவது வஸ்திரமில்லாமலும் அநுதின ஆகாரமில்லாமலும் இருக்கும்போது, உங்களில் ஒருவன் அவர்களை நோக்கி: நீங்கள் சமாதானத்தோடே போங்கள், குளிர்காய்ந்து பசியாறுங்கள் என்று சொல்லியும், சரீரத்திற்கு வேண்டியவைகளை அவர்களுக்குக் கொடாவிட்டால் பிரயோஜனமென்ன?

(லூக்கா 3:11) ... இரண்டு அங்கிகளையுடையவன் இல்லாதவனுக்குக் கொடுக்கக்கடவன்; ஆகாரத்தை உடையவனும் அப்படியே செய்யக்கடவன் என்றான்.

(யாக்கோபு 2:13) ஏனென்றால், இரக்கஞ்செய்யாதவனுக்கு இரக்கமில்லாத நியாயத்தீர்ப்புக் கிடைக்கும்; நியாயத்தீர்ப்புக்குமுன்பாக இரக்கம் மேன்மைபாராட்டும்.

(1 யோவான் 3:18) என் பிள்ளைகளே, வசனத்தினாலும் நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக்கடவோம்.

(மத்தேயு 25:35-40) பசியாயிருந்தேன், எனக்குப் போஜனங்கொடுத்தீர்கள்; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தீர்த்தீர்கள்; அந்நியனாயிருந்தேன், என்னைச் சேர்த்துக்கொண்டீர்கள்; வஸ்திரமில்லாதிருந்தேன், எனக்கு வஸ்திரங்கொடுத்தீர்கள்; வியாதியாயிருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள்; காவலிலிருந்தேன், என்னைப் பார்க்கவந்தீர்கள் என்பார். அப்பொழுது, நீதிமான்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, நாங்கள் எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உமக்குப் போஜனங்கொடுத்தோம்? எப்பொழுது உம்மைத் தாகமுள்ளவராகக்கண்டு உம்முடைய தாகத்தைத் தீர்த்தோம்? எப்பொழுது உம்மை அந்நியராகக்கண்டு உம்மைச் சேர்த்துக்கொண்டோம்? எப்பொழுது உம்மை வஸ்திரமில்லாதவராகக் கண்டு உமக்கு வஸ்திரங்கொடுத்தோம்? எப்பொழுது உம்மை வியாதியுள்ளவராகவும் காவலிலிருக்கிறவராகவும் கண்டு, உம்மிடத்தில் வந்தோம் என்பார்கள். அதற்கு ராஜா பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்.

மட்டுமல்ல, நாம் நற்கிரியைகளை செய்வது என்பது நமக்கு நித்திய ஜீவனையே  பெற்றுத்தரும் என்பதை பரிசுத்த வேதத்தில் கர்த்தர் நமக்கு போதித்திருக்கிறார்:

(ரோமர் 2:7) சோர்ந்துபோகாமல் நற்கிரியைகளைச் செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனை அளிப்பார்.

தேவனுக்கேற்ற, சுத்தமான பக்திக்கு எதிரான பிரதானமான காரியங்களை கீழ்க்கண்ட பரிசுத்த வேத வசனங்கள் நமக்கு எச்சரித்து விளக்குகிறது:

(1 யோவான் 2:16) ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள்.

மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமை ஆகிய இவைகள் முழுக்க முழுக்க சுயநலமானவைகள். எல்லாம் என்னுடையது, எனக்கே, என்னுடையவர்களுக்கே என நம்மை மாற்றும். மற்றவர்களுக்கு, மற்றவர்களுக்கு உதவி செய்வது என நம்மை சிந்திக்கவும் விடாது. எச்சரிக்கையாக இருப்போம்.

(யூதா 1:20-21) நீங்களோ பிரியமானவர்களே, உங்கள் மகா பரிசுத்தமான விசுவாசத்தின்மேல் உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, பரிசுத்தஆவிக்குள் ஜெபம்பண்ணி, தேவனுடைய அன்பிலே உங்களைக் காத்துக்கொண்டு, நித்தியஜீவனுக்கேதுவாக நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய இரக்கத்தைப்பெறக் காத்திருங்கள்.

விசேஷமாக கிறிஸ்து இயேசு நமக்காக இந்த பூமியில் வந்து பிறந்ததை வருகிற நாட்களில் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாட இருக்கிற நாம், இப்பொழுதிலிருந்தே ஏழை, எளிய, சிறுமைப்பட்ட மக்களுக்கு, கடும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இருக்கிற மற்றவர்களுக்கு நம்மாலான உதவிகளை செய்ய ஆயத்தமாவோம். நம் தேவனாகிய கர்த்தர் தாமே அதற்காக நம்மை ஆயத்தப்படுத்துவாராக, ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

(லூக்கா 6:38) கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள்; நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும் என்றார்.

(நீதிமொழிகள் 19:17) ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன்கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார்.

(நீதிமொழிகள் 28:27) தரித்திரருக்குக் கொடுப்பவன் தாழ்ச்சியடையான்; தன் கண்களை ஏழைகளுக்கு விலக்குகிறவனுக்கோ அநேக சாபங்கள் வரும்.

(யாக்கோபு 2:13) ஏனென்றால், இரக்கஞ்செய்யாதவனுக்கு இரக்கமில்லாத நியாயத்தீர்ப்புக் கிடைக்கும்; நியாயத்தீர்ப்புக்குமுன்பாக இரக்கம் மேன்மைபாராட்டும்.

(2 கொரிந்தியர் 9:7) அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்.

 தேவனாகிய கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக. ஆமென்.

தேவ நீதி மற்றும் நாம் நீதியான கிரியைகளை நடப்பித்தல் என்பதை குறித்த இந்த தேவ செய்தியை நீங்கள் அறிந்து கொள்வது உங்களுக்கு இன்னும் உதவியாயிருக்கும். நன்றி.


(ரோமர் 10:10) நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்.

மீண்டும் எழும்பி இருக்கும் இந்த கொள்ளை நோயிலிருந்து, மழை வெள்ளத்தினால் உண்டாகும் தொற்று நோய்களிலிருந்து தேவன் நம்மைக் காத்துகொள்ளும்படி நாம் கர்த்தரிடத்தில் (சங்கீதம் 91:3) வேண்டிக்கொண்டு நம்முடைய விசுவாசத்தை அறிக்கை செய்வோம்.

அனுதின விசுவாச அறிக்கை: தேவன் தம்முடைய கிருபையினாலே இந்த ஆண்டு முழுவதும் என்னை காத்து இரட்சிப்பார் என்று முழு மனதோடு விசுவாசிக்கிறேன். கிறிஸ்து இயேசுவுக்குள் நான் பிழைத்திருந்து நித்திய ஜீவனை பெற்றுக் கொள்ளும்படி பிதாவாகிய தேவன் எனக்கு அளித்த கிருபையினாலே நான் இரட்சிக்கப்படுவேன்.
இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஆமென்.


 

Print

Joomla SEF URLs by Artio